புதுடில்லி: கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. தற்போது வரை இத்தொற்றால் 5,32,224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 24,087 எனப் பதிவாகியுள்ளது. பலி எண்ணிக்கையில் சீனாவை மிஞ்சி இத்தாலி முதலிடத்திலும், ஸ்பெயின் இரண்டாவது இடத்திலும் உள்ளது. சீனாவில் பலி எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தியதற்கு முக்கிய காரணம் சமூக விலகல், சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது தான் எனச் சீனா கூறியுள்ளது.
இந்திய மக்களிடையே காணொலி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி மக்கள் அனைவரும் 21 நாள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்நிலையில் பாலிவூட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், சுய ஊரடங்கில் தன் குடும்பத்துடன் நேரம் செலவழித்து வருவதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உடற்பயிற்சி செய்து எப்போதும் கட்டுக்கோப்பாக இருக்கும் சல்மான் இந்த சமயத்தில் தனக்கு பிடித்தமான ஓவியங்கள் வரைந்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பாலிவுட் நடிகர்கள் கத்ரீனா கைப், ரகுல் ப்ரீத் சிங், தாங்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தத்தம் இன்ஸ்டா பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.